Saturday, February 27, 2016

என்னை பாதித்த சுஜாதா

நான் தலைவரை(சுஜாதாவை தலைவர் என்பதுதான் சரி) அறிந்தது சரியாகப் பதிமூன்று வயதில். நண்பன் வீட்டில் ஏன் எதற்கு எப்படி? புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே உள்ளே இழுத்துக்கொண்டார். எப்படியாவது முழுப்புத்தகத்தையும் படித்துவிட ஆசைப்பட்டு நண்பனின் அண்ணனிடம் அனுமதி வாங்கி வீட்டுக்கு வந்து அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துப் படித்து முடிப்பதற்குள் உன்பாடு என்பாடு ஆகிவிட்டது. முழுவதும் படித்து முடித்த அந்த விடலைப் பருவ வயதில் புரியாத சில விஷயங்களில் அவரது பாணி கூசவைத்தாலும் படிக்கையில் சுவாரசியமாக இருக்க எனக்குப் பிடித்த புத்தகமாக ஆனது. பள்ளியில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் என்ற கட்டுரையில் சுஜாதா என்று எழுதியதைப் பார்த்த ஆசிரியர் வித்தியாசமாக உணர்ந்திருப்பார். 

பின்னர் குமுதம், விகடனில் அவர் எழுதிய பல கதைகள் என்னை மேலும் அவர் மேல் பைத்தியம் கொள்ளச் செய்தன. நண்பர்களுக்குப் பிறந்தநாள் என்றாலும் அவர் எழுதிய புத்தகங்களையே பரிசளித்தேன். பிரிவோம் சந்திப்போம், நிறமற்ற வானவில், ஸ்ரீரங்கத்து தேவதைகள், தூண்டில் கதைகள், மத்யமர் கதைகள், எப்போதும் பெண், ஒரு கோடி ரூபாய் கனவு, தீண்டும் இன்பம், யவனிகா, ஆ போன்ற எழுத்துகள் எங்களை அவர் வசம் செலுத்திவிட்டன. 
ஸ்ரீரங்கத்து தேவதைகள் தூர்தர்சனில் தொடராக வந்த போது அசோக் ரமணியின் பாடலோடு பார்க்கவில்லை என்றால் அன்று பட்டினி கிடக்கும் அளவுக்குச் சென்றேன். குண்டு ரமணி, கடவுளுக்குக் கடிதம், முதல் காதல், பேப்பரில் பேர், பாட்டியின் கண்டிப்பு-பல இடங்களில் என்று மென்மேலும் படிக்கும் இன்பத்தை அளித்துக் கொண்டிருந்தார். 
கற்றதும் பெற்றதும் ஆரம்பித்த காலம் கார்கில் யுத்தம் முடிவடைந்தது. நண்பர்களின் இழப்புதான் இராணுவ வீரர்களை அதிகம் பாதிப்படையச் செய்யும் என்று அவர் எழுதியிருந்த கோணம் முற்றிலும் வித்தியாசமானது.

சிறுகதைகளில் அவர் செய்த வசியம் வேறு யாரும் செய்யாதது! சிவப்பு மாருதியின் கடைசி வரியான வரதராஜ பெருமாள், தேஜஸ்வினியின் கடைசி வரியான அவன் பறக்க ஆரம்பித்தான் போன்ற வரிகள் என்னால்(யாராலும்) மறக்க முடியாதவை.

அவர் கலாம் கூட ஜோசப்பில் படித்தவர் என்று அறிந்ததும் நண்பன் கார்த்தி பெருமை கொண்டு மிதப்பில் திரிவான். அவர் எழுதிய கலாம் பற்றிய நினைவுகள் இன்றும் மறக்க முடியாதவை. ஜஸ்ட் வாட்டர் கலாம்!
இருவரும் இணைந்து ராக்கெட் கட்டுமானம் பற்றி எழுதப்போகும் தொடரை ஆவலை எதிர்பார்த்து ஏமாந்த பல்லாயிரக் கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்!

பிரிவோம் சந்திப்போம் புத்தகத்தை மனனம் செய்து வைத்திருந்தேன். நண்பன் கார்த்தி "ஒரு பெண் அழகாக இருந்தால் பல குறைகள் மன்னிக்கப்படுகின்றன" என்ற வரியை அடிக்கோடிட்டு வைத்திருந்தான். 

பாரதி படத்தை அவர் மீடியா ட்ரீம்ஸ் சார்பில் தயாரித்ததை, பாண்டவர் பூமி படப்பிடிப்பை விசிட்செய்ததை விகடனில் படிக்க வாரா வாரம் காத்திருந்தோம். 
திரைப்படங்களில் அவர் வசனம் இடம்பெற்ற காரணங்களுக்காகவே படம் பார்த்த நிகழ்வுகளும் உண்டு. அவர் கதைகள் படமானது என்ற காரணத்துக்காக பிரியா, கரையெல்லாம் செண்பகப்பூ போன்ற பழைய(!) படங்களையும் பார்த்தோம். நினைத்தாலே இனிக்கும் பார்க்கக் நேர்ந்த போது கதை வசனம் சுஜாதா என்று டைட்டில் வந்ததும் அகமகிழ்ந்து போனேன். 
பாய்ஸ் படம் பார்த்து பலரும் கழுவி ஊற்றிய போதும் அதை அவர் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் கடந்து சென்றார். 
ரோஜா, திருடா திருடா, தில்சே(ஹிந்தி வசனமும் சேர்த்து), கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து படங்களில் அவர் மணியோடு இணைந்து எழுதிய வசனங்கள் அபாரம். 
இந்தியன், முதல்வன் படங்களை அவர் வசனத்துக்காகவே பார்த்து மகிழ்ந்தோம். 
புதிய இயக்குனர்களின் படங்களிலும் அவர் பரிமளித்தார். கண்ணெதிரே தோன்றினாள், உதயா போன்ற படங்கள் அவர் எழுத்தில் வேறு உயரத்தை அடைந்தன. 
புறநானூறு ஓர் எளிய அறிமுகம், திரைக்கதை எழுதுவது எப்படி? போன்ற புத்தகங்கள் வாங்க இயலா விலையில் இருக்க நண்பர்கள் உதவியோடு படித்தேன். 
ரா.கி.ரங்கராஜன் ஒருமுறை லைட்ஸ் ஆனில் சுஜாதாவின் அறிவின் வீச்சு கம்ப ராமயணத்தில் இருந்து ராக்கெட் இன்ஜினியரிங் வரை அகண்டிருக்கிறது என்று எழுதிய போது பேருவகை கொண்டோம். 
பட்டுக்கோட்டை பிரபாகர் தலைவரின் புத்தக வெளியீட்டின் போது சில வரிகளை மேற்கோள் காட்டியது ஏற்கனவே அதைப் படித்த சந்தோஷத்தை அதிகப்படுத்தியது(சீட்டு பவ் பவ் என்றிருந்தது, இந்த இங்க் தெளிச்ச நாய் கடிக்குமா?). 

க.சீ.சிவகுமார் ஒருமுறை தலைவரைப் பார்க்கச் சென்று, ஒருவரும் இங்கு சும்மா இல்லை என்ற பதிலோடு திரும்பியதை அறிந்து அவரைப் பார்க்க விரும்பிய எண்ணம் மெதுவாக மனதை விட்டு அகல ஆரம்பித்தது. ஆனால் எப்படியாவது அவர் பீச் வாக்கிங் செல்கையில் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஒரு நாள் அவசர வேலையாக பீச் ரோடில் வாகனத்தில் செல்கையில் அப்போதுதான் காந்தி சிலையருகில் நடைமேடையில் ஏறினார். அவரைப் பார்த்த மகிழ்வே போதும். உற்சாகத்தில் நான் பின்னால் அமர்ந்திருந்த தம்பியிடம் கத்தினேன். "டேய், சுஜாதாடா!"

அவன் "யாரந்த பொண்ணு?" என்றான்.

பிற்பாடு அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அன்று நாள் முழுக்க துக்கம்  அனுஷ்டித்தேன். பழைய கம்பெனி Chief இடம் விஷயத்தை சொன்ன போது அதிர்ந்தார். அவரும் என்னைப் போலவே சுஜாதா ரசிகர். போதாததற்கு அவர் நெல்லைக்காரர் வேறு. "எங்க தமிழ்தான் சிறந்ததுன்னு சுஜாதாவே சொல்லிருக்காரு வேய்" என்பார். 

பாரதி மணி பாட்டையா வேறு சுஜாதா பற்றி எழுதியதெல்லாம் படிக்கையில் அவரை ஒரு முறையாவது பார்த்திருக்கலாமே என்று தோன்றும். 
ஆனால் என் தாழ்வு மனப்பான்மையால் அவரைப் போல கலாமையும் பார்க்கும் முன்னரே காலனுக்கு காவு கொடுத்து விட்டேன்.